ஹைதராபாத்: ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சாஜித் அக்ரம் (50) என்ற நபர் ஹைதராபாத்தை பூர்வீகமாகக் கொண்டவர் என்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தகலவறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் தாக்குதல் நடத்தியதில் சாஜித் அக்ரம் என்பவர் ஹைதராபாத்தின் டோலிசவ்கி நகரத்தை பூர்வீகமாக கொண்டவர். கடந்த 1998-ம் ஆண்டு மாணவர் விசாவில் அவர் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்துவிட்டார்.
இதையடுத்து அவருடைய குடும்பத்தினருடனான தொடர்பு குறைவாகவே இருந்துள்ளது. இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே இந்தியா வந்துள்ளார். இவர், இறுதியாக கடந்த 2022-ம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்துள்ளார்.
இவரது தந்தை கடந்த 2017-ம் ஆண்டில் இறந்தபோதுகூட இறுதி காரியங்களை செய்யவதற்காக சாஜித் அக்ரம் இந்தியாவுக்கு வரவில்லை. ஆனால், சாஜித் அக்ரமின் மகன் நவீது கடந்த 2001-ல் ஆஸ்திரேலியாவில் பிறந்தவர். எனவே அவருக்கு அந்த நாட்டு குடியுரிமை வழங்கப்பட்டு உள்ளது. சாஜித் அக்ரம் ஹைதராபாத்தில் வணிகவியலில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தவர். ஆஸ்திரேலியாவுக்கு இடம்பெயர்ந்த பின்னர் அவர் ஐரோப்பிய பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவரிடம் இன்னும் இந்திய பாஸ்போர்ட் உள்ளது.
சாஜித் மற்றும் அவரது மகன் நவீது ஆகியோர் தீவிரவாத செயலில் ஈடுபட்டதற்கும், இந்தியாவுக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.