இந்தியா

தமிழகம், மேற்கு வங்கத்தில் எங்கும் மறு வாக்குப்பதிவு இல்லை: தேர்தல் அதிகாரிகள் தகவல்

மோகன் கணபதி

புதுடெல்லி: கடந்த 23-ம் தேதி நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் மேற்கு வங்க சட்டப்பேரவை முதற்கட்டத் தேர்தல் ஆகியவற்றில் எந்த வாக்குச் சாவடியிலும் மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்படவில்லை என்று இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 23-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 75,064 வாக்குச்சாவடிகளில் வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், வரலாறு காணாத அளவாக 85.15% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

அதே நாளில் மேற்கு வங்க சட்டப்பேரவைக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தமுள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 152 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 44,376 வாக்குச் சாவடிகளில் வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த தேர்தலில் 92% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், இவ்விரு மாநில தேர்தல்களில் எங்கும் மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்படவில்லை என்று இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த முடிவை எடுப்பதற்கு முன், தேர்தல் பார்வையாளர்களின் கருத்துகள், கள அறிக்கைகள் உள்ளிட்ட வழக்கமான ஆய்வு முறைகள் அனைத்தும் கவனமாக பரிசீலிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மறு வாக்குப்பதிவை அவசியமாக்கும் வகையிலான பெரிய அளவிலான இடையூறுகள் ஏதும் இன்றி வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ளதே இதற்குக் காரணம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

SCROLL FOR NEXT