புதுடெல்லி: சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் ஈரான் தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். இதன் மூலம் அமெரிக்கா - ஈரான் போரில் வளைகுடாவில் உயிரிழந்த இந்தியர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சக கூடுதல் செயலாளர் (வளைகுடா) அசீம் மகாஜன் நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மேற்கு ஆசிய போரில் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் கடந்த 18-ம் தேதி இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். இது வியாழக்கிழமை நள்ளிரவு உறுதி செய்யப்பட்டது. மேற்கு ஆசிய போரில் இதுவரை 6 இந்தியர்கள் இறந்துள்ளனர். ஒருவரை காணவில்லை. இந்தியர் காணாமல்போனது தொடர்பாகவும் இறந்தவர்களின் உடல்களை இந்தியாவுக்கு விரைந்து அனுப்பி வைப்பது தொடர்பாகவும் சவுதி அரேபியா, ஓமன், இராக் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து வருகின்றனர்.
இராக்கில் எம்.டி. சேஃப்சீ எண்ணெய் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 15 இந்திய ஊழியர்கள் சவுதி அரேபியா வழியாக இந்தியா வருகின்றனர். ஏற்கெனவே இரு கப்பல்களில் இருந்து மீட்கப்பட்ட 25 இந்திய ஊழியர்கள் ஓமன் வழியாக இந்தியா திரும்பி விட்டனர். வளைகுடா பிராந்தியத்தில் இருந்து கடந்த பிப்ரவரி 28 முதல் சுமார் 3 லட்சம் பயணிகள் இந்தியா திரும்பியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.