ஓங்கோல்: தமிழக மன்னர்கள் ஆந்திர மண்ணை ஆண்டிருக்கின்றனர். இதுபோல ஆந்திராவின் விஜயநகர பேரரசர்கள் தமிழகத்தை ஆண்டுள்ளனர்.
குறிப்பாக ஆந்திராவின் சித்தூர், திருப்பதி, விஜயநகரம் வரை விஜயநகர பேரரசர்கள் ஆண்ட காலத்தில் அவர்களின் ஆட்சியில் பாதுகாவலர்கள், நடன கலைஞர்கள், மேள, நாதஸ்வர கலைஞர்கள் என வசித்து வந்த பலர், மன்னராட்சி முடிவுக்கு வந்த பின்னர், தென் தமிழகத்தில் குடிபுகுந்தனர்.
சமீபத்தில் கோயமுத்தூர், திருப்பூர் பகுதியை சேர்ந்த தொழிலதிபர்கள் சுமார் 15-க்கும் மேற்பட்டோர் தங்களின் பூர்வீக கிராமமான ஆந்திராவின் பிரகாசம் மாவட்டம் ஓங்கோல் அருகே உள்ள ’உலிச்சி’ எனும் கிராமத்தை தேடி வந்தனர். ’சஞ்சு’ எனும் வீட்டின் பெயர் கொண்டவர்கள் பற்றி விசாரித்துள்ளனர்.
இதை அறிந்து, சஞ்சு குடும்பத்தைச் சேர்ந்த கண் டாக்டர் சஞ்சு சலமைய்யா அனைவரையும் வரவேற்று, விருந்தோம்பல் அளித்து, பெண்களுக்கு புடவைகளை பரிசளித்தார். ஆண்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி கவுரவித்தார். அடிக்கடி வருமாறு அக்கறையுடன் கேட்டுக்கொண்டார்.