புதுடெல்லி: இந்திய விமானப் படை தளபதி ஏ.பி. சிங், அமெரிக்காவின் எஃப்-15 ரக போர் விமானத்தில் பறந்தார். பாதுகாப்புத் துறைக்குத் தேவையான தளவாடங்களைக் கொள்முதல் செய்வதற்காகவும், பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவும் விமானப் படைத் தளபதி ஏ.பி. சிங் அண்மையில் அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
அதிநவீன வகை: இந்தப் பயணத்தின் போது அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இதனிடையே அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் உள்ள நெல்லிஸ் விமானப் படை தளத்துக்கு அவர் கடந்த 9-ம் தேதி சென்றார். அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த போயிங் எஃப்-15 இஎக்ஸ் ஈகிள்-2 ரகபோர் விமானத்தில் தளபதி ஏ.பி. சிங் ஏறி பறந்தார். அவருடன் அமெரிக்க விமானப் படையின் மேஜர் மேத்யூ பென்சன் உட்பட 2 பேர் இருந்தனர்.
அமெரிக்க விமானப்படையில் இடம்பெற்றுள்ள அதிநவீன வகை போர் விமானமாகும் இது. அமெரிக்காவின் நவீன வகை போர் விமானத்தின் திறன்களையும் வான் போரில் அதன் பங்கையும் இந்திய விமானப் படைத் தளபதி சிறப்பாகப் புரிந்து கொள்ள இந்தப் பயணம் உதவியதாக அமெரிக்க விமானப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானப் படை தளபதி ஏ.பி. சிங் தனது பயணத்தின் போது, அமெரிக்க விமானப் படையின் பிரிகேடியர் ஜெனரல் டேவிட் சி.எப்பர்சன் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார். விமானப்படை தளபதி ஏ.பி. சிங்குடன், இந்திய விமானப் படையின் ஏர் கமோடர் யஷ்பால் நேகியும் உடனிருந்தார்.