எல். முருகன்

 
இந்தியா

‘‘முருக பக்தர்களுக்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றி’’ - திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எல். முருகன் வரவேற்பு

மோகன் கணபதி

சென்னை: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அளித்துள்ள தீர்ப்பு, முருக பக்தர்களின் உணர்வுக்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றி என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றலாம் என நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அளித்த தீர்ப்பை, இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு உறுதிப்படுத்தி உள்ளது. இதை வரவேற்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதனின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று உறுதிபடுத்தியிருப்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.

திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்துள்ள தீபத்தூணில், கோயில் நிர்வாகத்தினருடன் இணைந்து தீபம் ஏற்றலாம் என்று, ஒரு மாத காலத்துக்கு முன்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தும், அந்த தீர்ப்பிற்கு மதிப்பளிக்காமல் இந்து சமுதாய மற்றும் முருக பக்தர்களின் நம்பிக்கையை புண்படுத்தும் விதமாக நடந்து கொண்டது அறநிலையத்துறை. மேலும், பக்தர்களின் மீதும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் மீதும், காவல்துறையை வைத்து அராஜக போக்கினை கட்டவிழ்த்துவிட்டு வேடிக்கை பார்த்தது தமிழக அரசு.

இந்து சமய அறநிலையத்துறை என்ற பெயரை வைத்துக்கொண்டு, கடந்த சில காலமாக இந்து சமய மக்களுக்கு எதிரான அறமற்ற துறையாகவே செயல்பட்டு வந்துள்ளது. ஆனால், இன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கியுள்ள தீர்ப்பானது, தமிழக அரசுக்கும் அறநிலையத்துறைக்கும் குட்டு வைக்கும் விதமாக அமைந்துள்ளது. தீபத்தூண், தர்காவுக்கே சொந்தம் என்ற அறநிலையத்துறையின் அறமற்ற வாதம் சிறுப்பிள்ளைத் தனமானது என்று கூறியிருப்பதுடன், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று தமிழக அரசு கூறுவதை அபத்தம் என்றும் கடுமையாக சாடியுள்ளது.

முருக பக்தர்களுக்கும், இந்து சமுதாய மக்களுக்கும், தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதை கோரிக்கையாக வைத்து தனது இன்னுயிரை மாய்த்துக் கொண்ட தீவிர முருக பக்தரான அமரர் பூரணச்சந்திரனின் தியாகத்துக்கும் உரிய நீதியை இன்றைய நீதிமன்ற தீர்ப்பு வழங்கியுள்ளது. இது வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு. முருக பக்தர்களின் உணர்விற்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றி.

இதற்குப் பிறகாவது ஆட்சி அதிகாரத்தை தவறான முறையில் பயன்படுத்துவதை விடுத்து, வருடந்தோறும் கார்த்திகை தீப நாளன்று, தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவினை பின்பற்றுமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT