பெங்களூரு: கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் சிர்வாரை சேர்ந்த கிருஷ்ணா நாயக் (56) நேற்று தனது குடும்பத்தினர் 9 பேருடன் சோராப்பூரில் உள்ள வேணுகோபால் சுவாமி கோயிலுக்கு சென்றார்.
அங்கு தரிசனம் முடிந்து காரில் சிர்வார் நோக்கி திரும்பினர். ஷாந்தாப்பூர் அருகே கார் சென்றபோது பெங்களூருவிலிருந்து குல்பர்கா நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து மீது கார் வேகமாக மோதியது. இதில் இரு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்து சாம்பலாயின.
இதில் காரில் பயணித்த கிருஷ்ணா நாயக் (56), அவரது மனைவி ஆனந்த கலா (50), அவரது மகன் சரணப்பா (26) உட்பட 6 பேர் உயிரிழந்தனர். சரணப்பாவின் மனைவி நிசர்கா (24), மகன் சித்தார்த் (3), மகள் சசிகலா (2) ஆகிய மூவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். பேருந்தில் பயணித்த 30-க்கும் மேற்பட்ட பயணிகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
விபத்து குறித்து போலீஸார் கூறுகையில், ‘‘ஒரே குடும்பத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். முதல்கட்ட விசாரணையில் கார் டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது” என்றனர்.