அமராவதி: கடுமையான வெயிலால் ஒரே நாளில் ஆந்திராவில் 21 பேரும், தெலங்கானாவில் 34 பேரும் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திராவில் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. இதன் காரணமாக கடந்த வெள்ளியன்று மட்டுமே இம்மாநிலத்தில் 21 பேர் வெயிலின் தாக்கம் தாள முடியாமல் சுருண்டு விழுந்து உயிரிழந்தனர். இதில் விஜயவாடாவில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் 8 பேர் ஊர், பெயர் தெரியாத யாசகர்கள். ஏலூரு, மேற்கு கோதாவரி, குண்டூர் என இப்பகுதிகளில் மொத்தம் 21 பேர் உயிரிழந்தனர். இதேபோன்று தெலங்கானா மாநிலத்திலும் 34 பேர் வெயில் தாக்கத்தால் இறந்துள்ளனர் என தெரியவந்துள்ளது. கரீம் நகர், அதிலாபாத், ரங்காரெட்டி, நல்கொண்டா, பெத்தபல்லி, ஜெய்சங்கர் பூபாலபல்லி, வாரங்கல், மகபூபாபாத், யாதாத்ரி புவனகிரி என தெலங்கானா மாநிலத்தில் பரவலாக மொத்தம் 34 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் உதவி தொகை வழங்குவதாக தெலங்கானா மாநில அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், நேற்று ஆந்திராவில் திருப்பதி, சித்தூர், நெல்லூர், கடப்பா ஆகிய பகுதிகளில் அதிகாலை முதலே லேசான மழை பெய்தது. இதனால் மட்டும் வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது.