இந்தியா

ரூ.500 லஞ்சம் பெற்ற அதிகாரிக்கு 36 ஆண்டுக்குப் பின் ஓராண்டு சிறை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ரூ.500 லட்சம் பெற்ற அதிகாரிக்கு 36 ஆண்டுகளுக்குப் பின் ஓராண்டு சிறை தண்டனை வழங்கி வழக்கை முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம்.

உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்த வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கடந்த 1990ம் ஆண்டு ரூ.500 லஞ்சம் பெற்று லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் சிக்கினார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அந்த அதிகாரிக்கு கடந்த 2006ம் ஆண்டு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2,000 அபராதம் விதித்தது.

          

இதையடுத்து அந்த அதிகாரி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மனுவை கடந்த 2012-ம் ஆண்டு நிராகரித்த உயர் நீதிமன்றம் கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரி என கூறியது. இதனால் அந்த அதிகாரி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அங்கு கடந்த 14 ஆண்டுகளாக பல அமர்வுகளில் நிலுவையில் இருந்த வழக்கை இறுதியாக நீதிபதிகள் பங்கஜ் மிதல் மற்றும் பி.பி.வராலே தலைமையிலான அமர்வு தற்போது முடித்து வைத்துள்ளது.

விசாரணை நீதிமன்றம், உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தவறு ஏதும் இல்லை என்று கூறிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிக்கு 75 வயது ஆவதை கருத்தில் கொண்டு, அவருக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை ஓராண்டாக குறைத்து உத்தரவிட்டது.

SCROLL FOR NEXT