பஸ்தார்: சத்தீஸ்கரில் 29 பேர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 10 பேரும் குற்றவாளிகள் என தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு மே 25-ம் தேதி சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள ஜிராம் பள்ளத்தாக்கில், காங்கிரஸ் கட்சி நடத்திய பரிவர்தன் பேரணி முடிந்து திரும்பிக் கொண்டிருந்த தலைவர்களின் வாகன அணிவகுப்பை மாவோயிஸ்ட்கள் வழிமறித்துத் தாக்கினர். இந்தத் தாக்குதலில் சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் நந்த் குமார் படேல் உட்பட 29 பேர் கொல்லப்பட்டனர்.
இதுதொடர்பாக பஸ்தார் மாவட்ட போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். பின்னர் இந்த வழக்கு என்ஐஏ அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை ஜக்தால்பூரிலுள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கில் என்ஐஏ அதிகாரிகள் கடந்த 2014-ல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். மேலும் 101 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். விசாரணை முடிந்த நிலையில் என்ஐஏ நீதிபதி அபய் சிங் ராஜ்புத் நேற்று தீர்ப்பு வழங்கினார்.
அப்போது வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 10 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார். மேலும் 10 பேருக்கான தண்டனை விவரங்கள் வரும் 16-ம் தேதி அறிவிக்ககப்படும் என்று அவர் தெரிவித்தார்.