மும்பை: மகாராஷ்டிராவில் கடந்த 2022-ல் சிவசேனா கட்சியில் பிளவு ஏற்பட்டது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி பாஜக கூட்டணியில் இணைந்தது. தற்போது உத்தவ் தாக்கரே தலைமையிலான அணியைச் சேர்ந்த 9 மக்களவை எம்.பி.க்களில் 6 பேர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைந்தனர்.
இந்நிலையில், சிவசேனா (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்), காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணிக் கட்சி எம்எல்ஏ-க்கள் கூட்டம் 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் கூட்டணியைச் சேர்ந்த 60 எம்எல்ஏ.க்களில் 37 பேர் மட்டுமே பங்கேற்றனர்.
இந்நிலையில், உத்தவ் தாக்கரே சிவசேனாவைச் சேர்ந்த 20 எம்எல்ஏ-க்களில் 14 பேர், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைய உள்ளதாக மகாராஷ்டிர அமைச்சரும் ஷிண்டே கட்சியின் மூத்த தலைவருமான குலாப் ராவ் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
சிவசேனாவின் மற்றொரு அமைச்சர் உதய சமந்த் கூறுகையில், ‘‘அப்படிப்பட்ட ஆபரேஷன் எதுவும் நடக்கவில்லை. ஆனால் எதிர்க்கட்சி எம்எல்ஏ.க்கள் பலர் தாங்களாகவே ஷிண்டேவுடன் இணைய ஆர்வம் காட்டுகின்றனர்’’ என்று கூறியுள்ளார்.