இந்தியா

சார் தாம் யாத்திரை 1 மாதத்தில் 12 லட்சம் பக்தர்கள் தரிசனம்

செய்திப்பிரிவு

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள புனிதத் தலங்களான பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய சார் தாம் ஆலயங்களுக்கு இந்த ஆண்டு முன்னெப்போதும் இல்லாத வகையில் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. நடை திறக்கப்பட்ட ஒரே மாதத்திற்குள் 12.62 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து புதிய சாதனையைப் படைத்துள்ளனர்.

தற்போது நாளொன்றுக்கு சுமார் 70,000 முதல் 80,000 பக்தர்கள் மலைக் கோயில்களுக்கு வருகை தருகின்றனர். இந்த யாத்திரையின் போது இதுவரை 40 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். இவை அனைத்தும் மாரடைப்பு உள்ளிட்ட காரணங்களால் நிகழ்ந்தவை.

இந்த ஆண்டு முதல் முறையாக பத்ரிநாத், கேதார்நாத் மற்றும் கங்கோத்ரி ஆகிய 3 ஆலயங்களுக்குள் இந்துக்கள் அல்லாதோர் நுழைவதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாற்று மதத்தினர் ஆலயத்திற்குள் நுழைய விரும்பினால், அவர்கள் சனாதன தர்மத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளதாக உறுதிமொழிப் பத்திரம் சமர்ப்பிக்க வேண்டும் என பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு சார் தாம் யாத்திரையில் மொத்தம் 50 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT