இந்தியா

கிரிக்கெட்டிலும் அரசியல்... - இந்திய அணியை வைத்து பன்முகத்தன்மை பாடமெடுத்த காங்கிரஸ்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: வரும் ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத் நகரில் அமைந்துள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் நடப்பு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாட உள்ளன. நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடிய 10 போட்டிகளிலும் வெற்றிபெற்று இறுதிப்போட்டியை அடைந்துள்ளது. இதையடுத்து இந்திய அணியின் வெற்றியை கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள்.

இதனிடையே, இந்திய அணியின் தனித்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்ட வரைபடம் கவனம் ஈர்த்துள்ளது. அந்த வரைபடத்தில், நடப்பு உலகக் கோப்பை தொடரில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்ற விவரங்கள் இடம்பெற்று உள்ளன. அதன் கூடவே அப்பதிவில்,

"பல்வேறு பகுதிகள், பல்வேறு மொழிகள், வேறுபட்ட மதங்கள், ஆனாலும், ஒரு அசைக்க முடியாத 'டீம் இந்தியா.' இது நமது தேசத்தின் உண்மையான சாராம்சத்தை உணர்த்துகிறது." என குறிப்பிட்டுள்ளது.

சமீபகாலமாக பாஜகவுக்கு பன்முகத்தன்மை குறித்து பாடம் எடுத்துவரும் காங்கிரஸ் தற்போது கிரிக்கெட் சீசனை முன்னிட்டு கிரிக்கெட்டிலும் அரசியலை புகுத்தி பன்முகத்தன்மை குறித்து பாடமெடுத்துள்ளது.

SCROLL FOR NEXT