படம்: ஜெ.மனோகரன்

 
சுற்றுச்சூழல்

கோவையில் 14 ஆண்டுகளாக துணிப்பைகளை இலவசமாக வழங்கி வரும் மூதாட்டி

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு

டி.ஜி.ரகுபதி

கோவை: சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களால் நிலம் மற்றும் நீர்நிலைகளுக்கு கடும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இதைத்தடுக்க தமிழக அரசால் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாலித்தீன் கவர்களுக்கு மாற்றாக துணி, மஞ்சப் பைகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசின் இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில், ஓய்வுபெற்ற பெண் அரசு ஊழியரான கோவை வடவள்ளியைச் சேர்ந்த கி.புஷ்பவல்லி (73) பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வுப் பணியை கடந்த 14 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறார். கோவை வ.உ.சி. மைதானத் தில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பொதுமக்களுக்கு துணிப் பைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, “நான் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் கணக்கு அலுவலராக பணியாற்றி கடந்த 2011-ல் ஓய்வு பெற்றேன். குடிநீரின் தேவை, நீர்நிலைகளை பாதுகாப்பது, நிலத்தடி நீர்மட்டம் உயர்வதன் அவசியம் ஆகியவற்றை அறிந்ததால், கடந்த 2013-ம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்பு ணர்வை மேற்கொண்டு வருகிறேன்.

பள்ளிகள், கல்லூரிகள், சுதந்திர தின விழா, குடியரசு தின விழா, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களின் பாதிப்பு குறித்து நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன். அப்போது ஒவ்வொருவருக்கும் ரூ.20 மதிப்புள்ள ஒரு துணிப் பையை இலவசமாக விநியோகிக்கிறேன். கடந்த 14 ஆண்டுகளில் 12 ஆயிரம் துணிப் பைகளை வழங்கியுள்ளேன்.

பிரபல துணி நிறுவனத்திலிருந்து துணியை சலுகை விலையில் வாங்கி, நானே வீட்டில் அமர்ந்து பையாக தைத்து பொதுமக்களுக்கு வழங்குகிறேன். எனது ஓய்வூதியத் தொகைகளை பயன்படுத்தி இப்பணிகளை மேற்கொள்கிறேன். மக்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்து வதை தவிர்க்க வேண்டும்” என்றார்.

SCROLL FOR NEXT