சுற்றுச்சூழல்

மயிலாடுதுறை: கடல் பகுதியில் எண்ணெய் கிணறு அமைக்க எதிர்ப்பு

செய்திப்பிரிவு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை கடல் பகுதியில் எண்ணெய், எரிவாயு ஆய்வு மற்றும் உற்பத்திக்காக 5 கிணறுகள் அமைக்க தனியார் நிறுவனத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ள உரிமத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

மயிலாடுதுறையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் இதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் கூறியது: மயிலாடுதுறைக்கு கிழக்கே வங்கக்கடலில் 81 சதுர கி.மீ. பரப்பளவில் ஹார்டி எக்ஸ்ப்ளோரேஷன் அண்ட் புரொடக் ஷன் இந்தியா என்ற தனியார் நிறுவனத்துக்கு எண்ணெய், எரிவாயு ஆய்வு மற்றும் உற்பத்திக்காக 5 கிணறுகள் அமைக்க மத்திய அரசு உரிமம் வழங்கியுள்ளது.

இதுபோன்று கிணறுகள் அமைத்து வெளியேற்றப்படும் ரசாயனக் கழிவுகள் மற்றும் அதிர்வுச் சோதனைகளால் மீன்வளம் அழியும். 2050-க்குள் கடலோரப் பகுதிகள் பெருமளவில் கடலுக்குள் மூழ்கும் அபாயம் உள்ளது. எனவே, சுற்றுச்சூழலையும், மீன்வளத்தையும் பாதிக்கும் இந்த திட்டத்துக்கு வழங்கிய உரிமத்தை திரும்பப் பெற வேண்டும். இத்திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என மத்திய அரசுக்கு தமிழக அரசு உடனடியாக கடிதம் எழுத வேண்டும். இவ்வாறு கூறினார்.

SCROLL FOR NEXT