சென்னை: கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது நமது அனைவரின் பொறுப்பாகும் என்று ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் தெரிவித்தார்.
சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினத்தை முன்னிட்டு தூய கடல், பாதுகாப்பான கடற்கரை, நமது அடையாளம்' என்ற கருப் பொருளின் கீழ் சென்னை மெரினா கடற்கரையில் சிறப்பு தூய்மைப் பணி நேற்று நடைபெற்றது.
இதில் ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் மற்றும் இந்திய கடலோரக் காவல் படை வீரர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் திரளாகக் கலந்து கொண்டனர். பின்னர் அனைவரும் குழுக்களாகச் சேர்ந்து கடற்கரையில் தேங்கியிருந்த பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகளை சேகரித்து, கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து ஆளுநர் அர்லேகர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "கடற்கரை தூய்மை,கடல் மாசு பாட்டை குறைத்தல் மற்றும் கடல் சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மெரினா கடற்கரையை சுத்தம் செய்ய நாம் தனியாக ஒரு நாளை கடைபிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது.
கடற்கரை மட்டுமின்றி நமது வீடு மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருப்பது நமது அன்றாடப் பழக்கமாக மாற வேண்டும். மேலும் கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது அரசின் பொறுப்பு மட்டுமல்ல, இது அனைவரின் பொறுப்பாகும்” என்றார்.