வெலிங்டன் ஏரியில் சூரிய உதயத்தில் பனி படர்ந்த ஏரி ரம்மியமாக காட்சியளித்தது.

 
சுற்றுச்சூழல்

ஊட்டி, குன்னூரில் உறைபனி பொழிவு தொடக்கம் - கடும் குளிரால் மக்கள் அவதி

ஆர்.டி.சிவசங்கர்

ஊட்டி: ஊட்டி, குன்னூரில் இந்தாண்டின் முதல் உறைபனி பொழிவு தொடங்கியது. கடும் குளிரால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடங்கி ஜனவரி வரை பனிக்காலம் நிலவுகிறது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக காலநிலை மாறுபாடு காரணமாக இந்த ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கியது.

அந்த வரிசையைத் தொடர்ந்து தற்போது பனிக்காலமும் இந்த ஆண்டு தாமதமாக தொடங்கியது. இந்நிலையில் நவம்பர் மாதம் நீர் பனி தொடங்கிய ஒரு வாரத்துக்குள் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தது.

அதன் பின்னர் டிட்வா புயலின் தாக்கம் காரணமாக பனிப் பொழிவு முற்றிலும் நின்றது. மேலும் மாவட்டம் முழுவதும் பல இடங்களிலும் கன மழை கொட்டித் தீர்த்தது.

பனி படர்ந்து காணப்பட்ட வெலிங்டன் ஜிம்கானா மைதானம்.

இந்நிலையில், ஒரு மாதம் கழித்து நேற்று முதல் மீண்டும் பனிப் பொழிவு தொடங்கியுள்ளது. ஊட்டி தாவரவியல் பூங்கா தலைக்குந்தா, படகு இல்லம், பைக்காரா, மார்க்கெட், குதிரை பந்தய மைதானம், குன்னூர் ஜிம்கானா மைதானம், வெலிங்டன் ஏரி ஆகிய பகுதிகளில் அதிகாலை முதலே அதிக அளவில் பனி படர்ந்து காணப்பட்டது.

இதனால் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது பனி கொட்டிக் கிடந்தது. இதனால் வனப்பகுதிகள் அதிகம் கொண்ட நீலகிரி காலையில் பசுமையாக தெரியும் நிலையில் தற்போது வெண்மையாக காட்சியளிக்கிறது. ஊட்டி, குன்னூரில் காலை முதல் மாலை வரை வெயிலான காலநிலை நிலவுகிறது.

இரவு முதல் அதிகாலை வரை பனி அதிகரித்து இருப்பதால் பொது மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். இதற்கிடையே கடும் குளிரிலிருந்து தப்ப பொதுமக்கள் அதிகளவில் கம்பளி ஆடைகளை அணிகின்றனர். மேலும் ஒரு சிலர் ஆங்காங்கே தீ மூட்டி குளிர் காய்கின்றனர்.

இது குறித்து தோட்டக்கலைத்துறை துணை அதிகாரிகள் கூறும் போது, ‘‘உதகையில் நேற்று குறைந்தபட்சமாக 9 டிகிரி செல்சியஸ், அதிகபட்சமாக 17 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. அடுத்த ஒரு சில வாரங்களில் மைனஸ் டிகிரியை வெப்பநிலை எட்டலாம். அதே சமயத்தில் காற்றில் ஈரப்பதத்தின் அளவு 58 சதவீதமாக இருந்தது’’ என்றனர்.

SCROLL FOR NEXT