திருச்சி: மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், தேசிய தூய்மையான காற்று திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் “தூய்மையான காற்று நகரம் குறித்து கணக்கெடுப்பு நடத்துகிறது.
இதில் 10 லட்சத்துக்கு மேல் மக்கள் தொகை கொண்ட நகரங்களுக்கு உயிரி / திடக்கழிவு எரிப்பை கட்டுப்படுத்துதல், சாலையில் தூசி கட்டுப்பாடு, கட்டுமானம் மற்றும் கட்டிடம் இடிப்பு கழிவு தூசி, வாகன புகை மாசு கட்டுப்பாடு உள்ளிட்ட மதிப்பீடுகள் அடிப்படையில் 200 மதிப்பெண்களுக்கு பகுப்பாய்வு செய்யப்பட்டு பெற்ற தரப்பட்டியல் அறிவிக்கப்படுகிறது. இதன்படி, 2026 ஆண்டுக்கான தூய்மையான காற்று நகரம் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
இதில், இந்திய அளவில் லக்னோ 198 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தது. இந்தூர் நகரம் 197 மதிப்பெண்கள் பெற்று 2-வது இடத்தையும், ஜபல்பூர் 195 மதிப்பெண்களுடன் 3-வது இடத்தையும் பிடித்தன.
தமிழகத்தில் திருச்சி மாநகரம் 183 மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் 12-வது இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்தையும் பிடித்துள்ளது. 2025-ம் ஆண்டு 186 மதிப்பெண்களுடன் 9-வது இடத்தில் இருந்த திருச்சி, நிகழாண்டு 3 இடங்கள் பின்தங்கியுள்ளது.
சென்னை 147.7 மதிப்பெண்களுடன் இந்திய அளவில் 35-வது இடமும், மாநில அளவில் 2-வது இடமும் பிடித்துள்ளது.