சென்னை: பள்ளிகளில் புதிய பாடத்திட்ட கற்பித்தல் செயல்பாடுகளை ஆய்வு செய்ய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதைப் பின்பற்றி துறை அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையான பாடத்திட்டத்தை மாற்றி அமைக்குமாறு மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு (எஸ்சிஆர்டிஇ) உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, முதல்கட்டமாக நடப்பு (2026-27) கல்வியாண்டில் 1 முதல் 3-ம் வகுப்புகளுக்கு முதல் பருவத்துக்கான புதிய பாடநூல்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன.
இந்த வகுப்புகளில் ஆய்வு மேற்கொள்ளும் அனைத்து விதமான துறைசார்ந்த அலுவலர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்படுகிறது. அத்துடன் ஆசிரியர் பதிவேடு குறித்த விவரங்களும், பாடவாரியான ஆய்வுப் படிவங்களும் இணைக்கப்பட்டுள்ளன. கல்வி அலுவலர்கள் இந்த வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றி, வகுப்பறை கற்பித்தலை ஊக்குவிக்கும் வகையில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.