சென்னை: வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (விஐடி) உடன் இணைந்து, ‘இந்து தமிழ் திசை’ மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வழங்கும் ‘நாளைய விஞ்ஞானி 2025’ எனும் அறிவியல் நிகழ்வு இந்த ஆண்டும் நடைபெற உள்ளது.
மாணவர்களிடையே அறிவியல் சிந்தனையைத் தூண்டும் வகையிலும், அறிவியல் திறனை வெளிக்கொணரும் நோக்கிலும் ‘நாளைய விஞ்ஞானி’ எனும் சிறப்புமிக்க நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது.
இதில் தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 8, 9, 10-ம் வகுப்பு மாணவர்கள் ஜூனியர் பிரிவிலும், 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் சீனியர் பிரிவிலும் பங்கேற்கலாம். ஒரு குழுவில் குறைந்தபட்சம் 2 மாணவர்களும், அதிகபட்சம் 3 மாணவர்களும், அவர்களுக்கு வழிகாட்டி ஆசிரியர் ஒருவரும் இருக்க வேண்டும்.
என்ன செய்ய வேண்டும்? - மாணவர்கள் தங்கள் பகுதியில் நிலவும் ஒரு பிரச்சினையை அடையாளம்கண்டு,அதற்கான காரணங்களை அறிவியல் கண்ணோட்டத்துடன் ஆராய வேண்டும். அறிவியல் வழிமுறைகளைப் பயன்படுத்தி, அந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும். பின்னர், மாணவர்கள் கண்டறிந்த புதுமைகளை ஆய்வு அறிக்கையாக தயாரிக்க வேண்டும்.
மாணவர்கள் தாங்கள் தொகுத்த ஆய்வறிக்கையை PDF File-ஆக இத்துடன் இணைக்கப்பட்டுள்ள க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 5 இடங்களில் மண்டல அளவிலான ஆய்வு சமர்ப்பித்தல் நிகழ்வுகள் நடைபெறும். சிறந்த ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்கும் மாணவர்கள், மண்டல அளவிலான அறிவியல் திருவிழாவில் பங்கேற்பர். விழாவில் பங்கேற்கும் அனைத்து மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இதில் தேர்வான மாணவர்கள் பிப்ரவரி இறுதியில் சென்னை விஐடி வளாகத்தில் நடைபெறும் மாநில அளவிலான அறிவியல் திருவிழாவில் பங்கேற்பர். வெற்றிபெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு 99440 29700 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
விஐடி பல்கலை. துணைத் தலைவர் முனைவர் ஜி.வி.செல்வம் கூறும்போது, “வளர்ந்து வரும் அறிவியல் - தொழில்நுட்ப யுகத்தில் மாணவர்கள் தங்களது அறிவியல் சிந்தனையை வளர்த்துக் கொள்வது அவசியமாகும். அறிவியல் கண்ணோட்டமே மாணவர்களை மனப்பாடக் கல்வியிலிருந்து மடைமாற்றி, அனுபவக் கல்விக்கு அடித்தளமிடுகிறது.
பயிற்சி, பரிசோதனை, தரவுகளை ஒட்டிய பகுப்பாய்வுகள் மூலம், ஆராய்ச்சி அடிப்படையில் கல்வி கற்கும்போது, அந்த அறிவு நிலைத்ததாகவும், எதிர்கால வாழ்க்கைக்கு வலுசேர்ப்பதாகவும் அமைகிறது. அறிவியல் பார்வைதான், மாணவர்களிடையே படைப்பாற்றல் மற்றும் புதுமை சிந்தனைகளை வளர்த்து, அவர்கள் நாளைய பொறுப்புள்ள குடிமக்களாக உருவாக வழிவகுக்கும்.
இயற்பியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங் குறிப்பிடுவதைப்போல, அறிவியலை வெறும் மதிப்பெண்களுக்காக அணுகாமல், எதிர்கால வாழ்க்கையை வடிவமைக்கும் கருவியாகக் கருதி, புதியனவற்றைக் கற்பதும், கண்டுபிடிப்பதும் தான் நோக்கமாக இருக்க வேண்டும். அத்தகைய நோக்கில்தான் விஐடி சென்னையும், ‘இந்து தமிழ் திசை’யும் இணைந்து நாளைய விஞ்ஞானி அறிவியல் நிகழ்வை நடத்துகின்றன” என்றார்.
மண்டலம் வாரியாக பதிவுசெய்ய கடைசி நாள் மற்றும் போட்டி தேதி:
திருநெல்வேலி ஜன. 17, ஜன. 24
திருச்சி ஜன. 31, பிப். 7,
சென்னை ஜன. 31, பிப். 8
மதுரை பிப். 7, பிப். 15
கோவை பிப். 14, பிப். 22