சென்னை: அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களின் விவரங்களை அனுப்பக் கோரி பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் பிரிவு) அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அரசு, நகராட்சி, உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 31.5.2025 நிலவரப்படி, அனைத்துப் பாட பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் நிரப்பத் தகுந்த காலிப்பணியிடங்களை மே 20-க்குள் பள்ளிக்கல்வி இயக்குநர் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.
அவ்வாறு காலிப் பணியிட விவரங்களை அனுப்பும்போது 01.08.2025-ல் ஆசிரியர் இல்லாமல் உபரி எனக் கண்டறிந்து இயக்குநரின் பொதுத் தொகுப்புக்கு ஒப்படைக்கப்படும் பணியிடங்களை எக்காரணத்தைக் கொண்டும் காலிப்பணியிடங்களாகக் கருதக் கூடாது.
அதேபோல், கூடுதல் தேவையுள்ள பள்ளிகளின் பெயர்களையும் காலிப் பணியிடங்களாகக் கருதக்கூடாது என்று மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், காலிப்பணியிட விவரங்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்பும்போது தற்போதைய நிலவரப்படி அப்பள்ளிக்கு பூர்த்தி செய்ய ஏதுவாக நிரப்பத் தகுந்த காலியிடங்கள் என்பதையும், இப்பணியிடம் அப்பள்ளியில் ஐஎப்எச்ஆர்எம்-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்த பின்னரே படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.