பீட்டா இந்தியா அமைப்பு மற்றும் தி குரோவ் பள்ளி சார்பில், விலங்குகளின் மீதான இரக்கத்தை பள்ளி மாணவர்களிடையே வளர்க்கும் வகையில் தத்ரூபமாக பேசும் யானை ரோபோ பொம்மையை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னை ஆழ்வார்பேட்டையில் நேற்று நடைபெற்றது. இதை ஆர்வமுடன் பார்த்து ரசித்த மாணவர்கள். | படம்: எஸ்.சத்தியசீலன் |
சென்னை: பீட்டா அமைப்பு சார்பில், பள்ளி மாணவர்களுக்கு, யானைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளி மாணவர்கள் இடையே யானைகள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்கவும், அதனை சுதந்திரமாக இருக்க உதவ வேண்டும் என்பதை வலியுறுத்தி, பீட்டா இந்தியா அமைப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை மேற்கொண்டு வருகிறது.
சென்னை, ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தி குரோவ் பள்ளியில் நேற்று இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. எல்லி என்ற பெயரில் யானை போல் ரோபோவை உருவாக்கி, அதன்மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
இந்த ரோபா யானை கண் சிமிட்டுவது, காதுகள் மற்றும் தும்பிக்கையை அசைத்தபடி உண்மையான யானை நேரடியாக உரையாடி விழிப்புணர்வை ஏற்படுத்துவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ரோபோட்டிக் யானை, சென்னை நகரங்களில் உள்ள பள்ளிகளில் வரும் 19-ம் தேதி வரை வலம் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், குரோவ் பள்ளி தலைவர் நந்திதா கிருஷ்ணா, முதல்வர் சுஜாதா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.