கோப்புப் படம்
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் ஆரம்ப பள்ளி அளவில், 352 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், 93 நடுநிலைப்பள்ளிகள், 49 உயர்நிலைப் பள்ளிகள், 8 அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளிகள், 5 பகுதி அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளிகள், 3 ஆதி திராவிடர் பள்ளி, ஒரு சமூக நலப்பள்ளி, 32 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 10 அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி, ஒரு பகுதி உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி என, மொத்தம் 554 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த பள்ளிகளில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கை குறைந் துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து கல்வியாளர்கள் கூறியதாவது: கடந்த 2025-2026-ம் கல்வியாண்டில் 1-ம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 2,183 மாணவர்கள் பயின்று வந்த நிலையில், நடப்பாண்டு அந்த எண்ணிக்கை 1,689 ஆக குறைந்துள்ளது.
494 மாணவர்கள் அரசு பள்ளியிலிருந்து வெளியேறி உள்ளனர். 2025-26-ம் கல்வியாண்டில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 35,446 மாணவர்கள் படித்த நிலையில், நடப்பாண்டு மாணவர்களின் எண்ணிக்கை 32,437 ஆக குறைந்துள்ளது.
இந்த கல்வி ஆண்டில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை 3,009 மாணவர்கள் அரசு பள்ளியிலிருந்து வெளியேறி உள்ளனர். மாணவர்களுக்கு கல்வி அளிக்க அரசு பல திட்டங்களை தீட்டி வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
நடப்பாண்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள 48 அரசு பள்ளிகளில் முதலாம் வகுப்பில் ஒரு மாணவர் கூட சேர்க்கப்படவில்லை.
ஊட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அப்புகோடு, குன்னூர் ஊராட்சி ஒன்றியம் காந்திபேட்டை, கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் பேரகனி மற்றும் கூடலூர் ஊராட்சி ஒன்றியம் ஆத்தூர் பள்ளிகளில் மாணவர்களே இல்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறும் போது, ‘‘மலை மாவட்டமான நீலகிரியில் சில பள்ளிகளில் மாணவர்கள் குறைவாக உள்ளதால், அருகில் உள்ள பள்ளிகளில் அந்த மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வனப்பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள் வனத்துறையினர் உதவியுடன் வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.
பழங்குடியின மாணவர்கள் மத்தியில் நிலவும் இடை நிற்றலை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மாணவர் சேர்க்கை குறித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.