அமைச்சர் கோவி.செழியன்
சென்னை: ‘உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து, அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் விரைவில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படுவார்கள்’ என உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார்.
இது குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனத்தில், மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து, அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் விரைவில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படுவர். இதற்கான நடவடிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்வார்” என்றார்.
முன்னதாக, தமிழக பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டதை அடுத்து, உச்ச நீதிமன்றமே தனக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கி சட்டமாக்கியது. இதை எதிர்த்து பாளையங்கோட்டையைச் சேர்ந்த பாஜக வழக்கறிஞர் கே.வெங்கடாச்சலபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு,துணைவேந்தர்களை நியமிக்க இடைக்கால தடை விதித்தது.
இந்த தடையை நீக்கக் கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த விசாரணையை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரியும் தமிழக அரசு தரப்பில்உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டபிறகு, துணைவேந்தர் நியமன சட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை ரத்து செய்தது. மேலும் நிலுவையில் உள்ள இந்த மனுவை 6 வாரங்களுக்குள் விசாரிக்கவும், இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே தெரிவித்த கருத்துகளை கேட்கவும் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.