சென்னை: தமிழகத்தில் 4 சுற்றுகளாக கலந்தாய்வு முடிந்த நிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள 48 இடங்களை நிரப்ப, தேசிய மருத்துவ ஆணையத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.
இந்த இடங்கள் மற்றும் எய்ம்ஸ், ஜிப்மர், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் (டிஜிஎச்எஸ்) மருத்துவக் கலந்தாய்வு குழு (எம்சிசி) ஆன்லைனில் நடத்துகிறது.
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள் (85 சதவீதம் இடங்கள்) மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு, நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வை மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ) நடத்தி வருகிறது.
அதன்படி, 2025-26-ம் ஆண்டில் தமிழகத்தில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 6,600 எம்பிபிஎஸ், 1,583 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. நிர்வாக ஒதுக்கீட்டில் 1,736 எம்பிபிஎஸ், 530 பிடிஎஸ் இடங்கள் உள்ளன.
இந்த படிப்புகளில் சேர 72,194 பேர் தரவரிசை பட்டியலில் தகுதி பெற்றனர். இதில், 7.5 சதவீத ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்கள், சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு மட்டுமே நேரடி கலந்தாய்வு நடத்தப்பட்டது. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு https://tnmedicalselection.net என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறையில் நடந்தது. இதுவரை 4 சுற்றுகளாக கலந்தாய்வு முடிந்த நிலையில், 48 இடங்கள் காலியாக உள்ளன.
அரசு பள்ளி மாணவர் ஒதுக்கீடு: இதுகுறித்து தமிழக மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி இயக்ககத்தின் மாணவர் சேர்க்கை குழு செயலர் லோகநாயகி கூறும்போது, “சென்னை, கடலூர் அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 3 பிடிஎஸ் இடங்கள் உட்பட தனியார் கல்லூரிகளில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு என 48 இடங்கள் காலியாக உள்ளன.
அதில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் ஒரு பிடிஎஸ் இடமும் காலியாக உள்ளது. இந்த இடங்களை நிரப்ப, தேசிய மருத்துவ ஆணையத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது” என்றார்.