தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து 11 ஆண்டுகளாக பிளஸ் 2 தேர்வில் சதமடித்து வருகிறது கருக்காடிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கருக்காடிப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கருக்காடிப்பட்டி, மேலத்தோப்பு, செங்கமேடு, பத்துதாக்கு, அம்மையாண்டி, ஆண்டிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளி 1997-ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியிலிருந்து மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், 2026-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வை 24 மாணவர்கள், 28 மாணவிகள் என 52 பேர் எழுதினர்.
இதில், தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த பள்ளி மாணவ, மாணவிகள் 2015-ம் ஆண்டு முதல் பிளஸ் 2 தேர்வில் தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து பள்ளியின் தலைமையாசிரியர் எல்.ராஜகுமாரன் கூறியது: ஒரத்தநாடு வட்டத்தில் முழுவதும் கிராமப் பின்னணியில் இந்த பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் தொடர்ந்து 11 ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சியை பெற்று வருகின்றனர்.
இதற்கு முக்கிய காரணம் ஆசிரியர்களின் முழு அர்ப்பணிப்பும், கிராம மக்கள், பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர்- ஆசிரியர்கள் கழகம், முன்னாள் மாணவர் களின் ஒத்துழைப்பு தான்.
பள்ளியில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு காலை, மாலை சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன. சிறப்பு வகுப்புகளுக்கு பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பெரிதும் உறுதுணையாக இருந்தனர்.
இந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் அனைவரும் தொடர்ந்து உயர்கல்வியை பயின்று வருகின்றனர். 2024-ம் ஆண்டு பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவி நீட் தேர்விலும் தேர்ச்சியடைந்து மதுரை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்து வருகிறார்.
ஆண்டுதோறும் 20-க்கும் மேற்பட்ட மாணவர்களை தமிழகத்தின் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் பள்ளி ஆசிரியர்களின் வழிகாட்டுதலில் படிக்க வைத்து வருகிறோம் என்றார்.