சென்னை: செயற்கை நுண்ணறிவு மூலம் வெப் டிசைனிங் உருவாக்குதல் குறித்து, கிண்டியில் 3 நாள் பயிற்சிக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இன்றைய டிஜிட்டல் உலகில் ஒவ்வொரு வணிகத்துக்கும் இணையதளம் என்பது இன்றியமையாத தேவையாக உள்ளது.
இதை கருத்தில்கொண்டு, தொழில் முனைவோர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், கிண்டியில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் இணையதளங்களை வடிவமைப்பது (வெப் டிசைனிங்) குறித்த பயிற்சி மார்ச் 4 முதல் 6-ம் தேதி வரை 3 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
இதில் ஹெச்.டி.எம்.எல், சி.எஸ்.எஸ்-ன் அடிப்படைகள், இணையதள வடிவமைப்பின் முக்கிய கோட்பாடுகள், செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்தி மிக எளிமையாகவும், வேகமாகவும் இணையதளங்களை வடிவமைக்கும் நவீன முறைகள் கற்றுக்கொடுக்கப்படும்.
பல்வேறு வாய்ப்புகள்
இத்துடன், பங்கேற்பாளர்கள் நேரடியாக தங்களின் சொந்த இணையதளத்தை உருவாக்கி, அதை இணையத்தில் வெளியிடும் நடைமுறைப் பயிற்சியும் வழங்கப்படும். மேலும், இணையதளங்களைத் தேடுபொறியில் முன்னிலைப்படுத்தும் எஸ்இஓ முறைகள் பற்றியும் விளக்கமளிக்கப்படும்.
பயிற்சி முடிவில், ஐடி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு, ஃப்ரீலான்ஸ் முறையில் இணையதள மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்ளுதல் மற்றும் சிறு தொழில்களுக்கான டிஜிட்டல் சேவை வழங்கும் வணிகத்தை தொடங்குதல் போன்ற பல்வேறு வாய்ப்புகள் குறித்து வழிகாட்டப்படும்.
இந்த பயிற்சியில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, கணினி அறிவு கொண்ட 18 வயது நிரம்பியவர்கள் அனைவரும் பங்கேற்கலாம். முன்பதிவு அவசியம். கூடுதல் விவரங்களுக்கு www.editn.tn என்ற இணையதளத்தையும், 9360221280, 8668100181 என்ற எண்களையும் தொடர்பு கொள்ளலாம்.