டாக்டர் ராஜலெக்ஷ்மி
புதுச்சேரி: நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி நுழைவுத் தேர்வு 2025-ல் (டிசம்பர் 2025-ல் நடைபெற்றது) அறுவை சிகிச்சை பிரிவில் அகில இந்திய தரவரிசை 1-ஐ ஜிப்மர் நிறுவனத்தின் முன்னாள் மாணவி டாக்டர் ராஜலெக்ஷ்மி வென்றுள்ளார்.
டாக்டர் ராஜலெக்ஷ்மி, ஜிப்மரில் எம்பிபிஎஸ் படிப்பை கடந்த 2015-ல் முடித்தார். பின்னர் பொது அறுவை சிகிச்சையில் எம்.எஸ். (2022-2024) பட்டம் பெற்றார். இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 2024 முதல் பிப்ரவரி 2025 வரை ஜிப்மரில் மூத்த பயிற்சி மருத்துவராக (Senior Resident) பணியாற்றினார்.
முதுநிலை பட்டப்படிப்பு பயிற்சிக் காலத்தில் டாக்டர் ராஜலெக்ஷ்மி சிறப்பான கல்வித் திறனை வெளிப்படுத்தி, இறுதி முதுநிலை பட்டப்படிப்பு பல்கலைக்கழகத் தேர்வில் முதலிடம் பெற்று அதற்காக தங்கப் பதக்கம் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார்.
டாக்டர் ராஜலெக்ஷ்மி தற்போது, நாட்டின் முன்னணி புற்றுநோய் சிகிச்சை மற்றும் பயிற்சி நிறுவனங்களில் ஒன்றான மும்பை டாடா மெமோரியல் மருத்துவமனையில் புற்றுநோய் அறுவைசிகிச்சை துறையில் (MCh Surgical Oncology) மேற்படிப்பைத் தொடர திட்டமிட்டுள்ளார் என்று ஜிப்மர் தெரிவித்துள்ளது.