சென்னை: சென்னை பல்கலைக்கழக நிலத்தியல் (ஜியாலஜி) துறையின் தலைவர் எம்.சுரேஷ் காந்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை பல்கலைக்கழக கிண்டி வளாகத்தில் இயங்கி வரும் நிலத்தியல் துறை, நீடித்த ஆதார திட்டமிடல் மற்றும் மேலாண்மைக்கான புவி அறிவியல் முறைகள் என்ற புதிய டிப்ளமா படிப்பை (Diploma in Geoscientific Methods for Sustainable Resource Planning and Management ) வரும் கல்வி ஆண்டில் (2026-2027) அறிமுகப்படுத்துகிறது.
சுயநிதி அடிப்படையில் தொடங்கப்படும் இந்த படிப்பானது வளர்ந்து வரும் துறையான சுற்றுச்சூழல் மற்றும் ஆதார மேலாண்மையில் ஆராய்ச்சி திறன்களை வலுப்படுத்தவும் மாணவர்களின் வேலைவாய்ப்புத்திறனை மேம்படுத்தும் நோக்கிலும் தொடங்கப்படுகிறது.
இந்த ஓராண்டு கால படிப்பில் பிஎஸ்சி, எம்எஸ்சி பட்டதாரிகள் சேரலாம். மேலும் பிடெக் சுற்றுச்சூழல் பொறியியல், சிவில் இன்ஜினீயரிங், பிடெக் ஜியோ-இன்பர்மேட்டிக்ஸ், தொலையுணர்வு மற்றும் பயன்பாட்டு அறிவியல் பட்டதாரிகளும் சேர தகுதியுடையவர் ஆவர்.
படிப்புக்கு மொத்தம் 18 கிரெடிட் வழங்கப்படும். மொத்தம் 6 பாடங்கள். 120 மணி நேர வகுப்பறை பாடம் மற்றும் களப்பணி, செய்முறை பணி ஆகியவற்றை உள்ளடக்கியது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.