சென்னை: உதவிப் பேராசிரியர் பணிக்கான முதல்கட்ட சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு ஜூலை 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது என்று என்டிஏ அறிவித்துள்ளது.
நம்நாட்டில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுக்கு இருமுறை கணினி வழியில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு சில அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு மட்டும் பிரத்யேகமாக நடத்தப்படும்.
அதன்படி இவ்வாண்டு முதல்கட்ட சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு ஜூலை 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கியுள்ளது. எனவே, விருப்பமுள்ள பட்டதாரிகள் https://csirnet.nta.nic.in/ என்ற இணையதளம் வழியாக ஜூன் 19-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை மே 20-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். மேலும், விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய ஜூன் 22, 23 ஆகிய தேதிகளில் வாய்ப்பு வழங்கப்படும்.
இந்த தேர்வானது ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் மட்டுமே நடைபெறும். தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு உள்ளிட்ட கூடுதல் விவரங்களை /nta.ac.in/ என்ற வலைதளத்தில் அறிந்துகொள்ளலாம். விண்ணப்பிப்பதில் ஏதேனும் சிரமங்கள் இருப்பின் மாணவர்கள் 011-40759000/ 69227700 ஆகிய தொலைபேசி எண்கள் மூலமாக அல்லது csirnet@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக தொடர்பு கொண்டு உரிய விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.