சென்னை: தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு துணைவேந்தராக எஸ்.புஷ்கலா நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை, கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகம் கடந்த 1987-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இப்பல்கலைக்கழகத்தின் 11-வது துணைவேந்தராக மருத்துவர் கே.நாராயணசாமி கடந்த 2023-ம் ஆண்டு தமிழக ஆளுநரால் நியமிக்கப்பட்டார். துணைவேந்தரின் பதவிக் காலம் 3 ஆண்டுகள் ஆகும்.
இந்நிலையில், நாராயணசாமியின் பதவிக் காலம் கடந்த மே 31-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பியல் துறைத் தலைவர் மருத்துவர் எஸ்.புஷ்கலாவை பொறுப்பு துணைவேந்தராக செயல்பட மருத்துவ பல்கலைக் கழக ஆட்சி மன்றக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, நேற்று அந்த பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டார். புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய அரசு தரப்பில் தற்போது தெரிவுக் குழு அமைக்கப்பட வேண்டும்.
அக்குழுவின் ஒருங்கிணைப்பாளரை அரசே நியமிக்க வேண்டும். அதில், உறுப்பினர்களாக செயல்பட, பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு சார்பில், முன்னாள் துணை வேந்தர் மருத்துவர் சாந்தராமன் முன்மொழியப்பட்டுள்ளார்.
செனட் குழு சார்பில், நரம்பியல் மருத்துவர் டாக்டர் கே.செல்வகுமார் உறுப்பினராக உள்ளார். அரசு சார்பில் ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்பட்டதும், அக்குழுவினர், தகுதியானவர்களிடம் விண்ணப்பங்களை பெற்று பரிசீலனை செய்வார்கள்.
குறைந்தபட்சம் 3 பேரை பரிந்துரை செய்து பல்கலைக்கழகத்தின் வேந்தரான ஆளுநரின் பரிசீலனைக்கு அனுப்புவார்கள். அவர்களில் ஒருவரை நேர்முக தேர்வு மூலம் தேர்ந்தெடுத்து துணைவேந்தராக ஆளுநர் நியமிப்பார்.
3 மாதங்களுக்குள் இந்த நடைமுறைகள் நிறைவடைய வேண்டும். அப்படி இல்லை என்றால், பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க சிறப்பு குழுவை அரசு அமைக்கலாம்.