சென்னை: தொழில்நுட்பக் கல்வி ஆணையரும், தொழில்நுட்பத் தேர்வுகள் வாரியத்தின் தலைவருமான ஜெ.இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல், அரசு கணினி சான்றிதழ் தேர்வு (COA) ஆகிய தொழில்நுட்பத் தேர்வுகள் புதிய பாடத்திட்டத்தின்கீழ் பிப்ரவரி மாதம் நடத்தப்பட உள்ளன.
இத்தேர்வுகள் ஏற்கெனவே இருந்து வரும் பாரம்பரிய முறையிலும், கணினிவழி முறையிலும் நடத்தப்படும். பாரம்பரிய வழிமுறையிலான சுருக்கெழுத்து தேர்வு பிப்ரவரி 7 மற்றும் 8-ம் தேதியும், கணக்கியல் தேர்வு பிப்ரவரி 9-ம் தேதியும் தட்டச்சு தேர்வுகள் பிப்ரவரி 14 மற்றும் 15-ம் தேதியும் நடைபெறும்.
அதேபோல், கணினி வழியிலான தட்டச்சு தேர்வு, சுருக்கெழுத்து தேர்வு மற்றும் அரசு கணினி சான்றிதழ் தேர்வு பிப்ரவரி 23 முதல் ஏப்ரல் 20 வரை நடைபெறும். இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று (டிச.30-ம் தேதி) தொடங்கி ஜனவரி 19-ம் தேதி முடிவடையும். தேர்வர்கள் https://tndtegteonline.in/ என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முடிவுகள் ஏப்ரல் 30-ம் தேதி வெளியிடப்படும். தேர்ச்சி பெற்றவர்கள் டிஜிட்டல் சான்றிதழ்களை (e-certificates) மே 27 முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.