உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள கவுதம புத்தா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கல்வி திரைப்பட விழாவில், "பாவை கூத்து - மறந்துபோன மேடை நாடகம்" என்ற ஆவண படத்துக்காக சிறந்த பட விருதை அண்ணா பல்கலைக்கழக கல்வி பல்லூடக ஆராய்ச்சி மைய இயக்குநர் எஸ்.அருள்செல்வன் பெற்றுக்கொண்டார்.
சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் தயாரித்துள்ள `பாவைக் கூத்து- மறந்துபோன மேடை நாடகம்' என்ற ஆவணப் படத்துக்கு உ.பி. கல்வி திரைப்பட விழாவில் சிறந்த ஆவணப் பட விருது கிடைத்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கல்வி பல்லூடக ஆராய்ச்சி மையம் (Educational Multimedia Research Centre-EMRC) சார்பில் தமிழகத்தின் பாரம்பரியக் கலையான பாவைக் கூத்து கலையின் பாரம்பரியத்தை வெளிக்கொணரும் வண்ணம் `பாவைக் கூத்து- மறந்துபோன மேடை நாடகம்' (Paavai Koothu – The Forgotten Theatre) என்ற பெயரில் ஆவணப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
அந்த மையத்தின் இயக்குநர் எஸ்.அருள்செல்வன் தயாரிப்பில் அந்த மையத்தைச் சேர்ந்த டி.வினோத் ராஜேஷ் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது.
இந்த ஆவணப் படம், தமிழகத்தின் பழங்கால கலையான தோல் பாதைக் கூத்து கலையின் பாரம்பரியத்தையும், தோல் பாவை கலைஞர்களின் வாழ்க்கை, அவர்கள் சந்திக்கும் போராட்டங்கள், அவர்களின் பாரம்பரியம் ஆகியவற்றை தத்ரூபமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது.
ரூ.50 ஆயிரம் பரிசு
இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள கவுதம புத்தா பல்கலைக்கழகத்தில் கடந்த 27, 28-ம் தேதி நடைபெற்ற கல்வி திரைப்பட விழாவில் அந்த ஆவணப்படம் திரையிடப்பட்டு சிறந்த ஆவணப் படமாக தேர்வு செய்யப்பட்டது.
சிறந்த ஆவணப் பட விருதை அண்ணா பல்கலைக்கழக கல்வி பல்லூடக ஆராய்ச்சி மைய இயக்குநர் அருள்செல்வன் பெற்றுக்கொண்டார்.
இந்த விருது ரூ.50 ஆயிரம் பரிசு மற்றும் பாராட்டுச் சான்று ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும். சிறந்த ஆவணப் பட விருது பெற்றதற்காக அருள்செல்வன், வினோத் ராஜேஷ் ஆகியோருக்கு அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் வி.குமரேசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.