கல்வி

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் அனைத்தும் ஆகஸ்ட் மாதத்துக்குள் நிரப்பப்படும்: கல்லூரி கல்வி ஆணையர்

ஜெ.கு.லிஸ்பன் குமார்

சென்னை: அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியல் கல்லூரிகளில் காலியாகவுள்ள முதல்வர் பணியிடங்கள் அனைத்தும் ஆகஸ்ட் மாதத்துக்குள் நிரப்பப்படும் என்று கல்லூரி கல்வி ஆணையர் பா.பொன்னையா தெரிவித்தார்.

தமிழகத்தில் 181 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளும் 7 அரசு கல்வியல் கல்லூரிகளும் உள்ளன. இவை அனைத்தும் கல்லூரி கல்வி ஆணையரகத்தின் கீழ் இயங்குகின்றன. இவற்றில் 58 கல்லூரிகள் கிரேடு 1 கல்லூரிகள், எஞ்சிய 130 கல்லூரிகள் கிரேடு 2 கல்லூரிகள். இந்நிலையில், 25 கிரேடு-1 கல்லூரிகளிலும், 100 கிரேடு-2 கல்லூரிகளிலும் நீண்ட காலமாக முதல்வர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. இதுதவிர கிரேடு-1 கல்லூரி முதல்வர் நிலையில் 2 மண்டல இணை இயக்குநர் பதவியும் காலியாக இருக்கிறது.

தற்போது ஒவ்வொரு கல்லூரியிலும் மூத்த பேராசிரியர்கள் பொறுப்பு முதல்வர்களாக இருந்து பணியாற்றி வருகின்றனர். பொறுப்பு முதல்வராக இருப்பதால் அவர்களால் நிர்வாக ரீதியாக முக்கிய முடிவுகளை எடுக்க இயலவில்லை. அரசு கல்லூரிகளில் நீண்ட காலமாக காலியாகவுள்ள உள்ள முதல்வர் பணியிடங்களை நிரப்ப வேண்டு் என்று தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இதுகுறித்து கல்லூரி கல்வி ஆணையர் பா.பொன்னையாவிடம் கேட்டபோது, "கிரேடு-1 அந்தஸ்து கல்லூரிகளில் முதல்வர் பதவி காலியாகவுள்ள 24 இடங்களில் முதல்கட்டமாக 12 இடங்களை நிரப்புவதற்கான தகுதி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே, விரைவில் அந்த காலியிடங்கள் நிரப்பப்பட்டுவிடும். அதேபோல், எஞ்சிய கிரேடு-1 கல்லூரிகளிலும் கிரேடு-2 காலியிடங்களிலும் ஆகஸ்ட் மாதத்துக்குள் முதல்வர் பணியிடங்கள் அனைத்தும் நிரப்ப்பபட்டுவிடும். இந்த பணியை ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

அரசு கல்லூரிகளில் காலியாகவுள்ள முதல்வர் பணியிடங்களை விரைந்து நிரப்ப கல்லூரி கல்வி ஆணையரகம் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று அரசு கல்லூரி ஆசிரியர் கழக பொதுச்செயலாளர் சோ.சுரேஷ் வேண்டுகோள் விடுத்தார்.

SCROLL FOR NEXT