சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு நாளை ஆன்லைனில் தொடங்குகிறது.
மாநில கலந்தாய்வு வரும் 13-ம் தேதி தொடங்கவுள்ளது. நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீதம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக் கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன.
இந்த இடங்கள் மற்றும் எய்ம்ஸ், ஜிப்மர், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் (டிஜிஎச்எஸ்) மருத்துவக் கலந்தாய்வு குழு (எம்சிசி) ஆன்லைனில் நடத்தி வருகிறது.
இந்நிலையில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2025 - 26-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய கலந்தாய்வு முதல் சுற்று https://mcc.nic.in/ என்ற இணையதளம் மூலம் வரும் 4-ம் தேதி (நாளை) தொடங்கி 17-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இட ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் 22-ம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும். மாணவர்களின் சான்றிதழ் சரிப்பார்ப்பு பணிகளை 23-ம் தேதிக்குள் கல்லூரி நிர்வாகம் முடிக்க வேண்டும்.
இதையடுத்து, இரண்டாம் சுற்று கலந்தாய்வு ஆக. 24-ம் தேதியும், மூன்றாம் சுற்று கலந்தாய்வு செப். 10-ம் தேதியும், இறுதி சுற்று கலந்தாய்வு செப். 27-ம் தேதியும் தொடங்கி நடைபெறுகிறது.
அதேபோல், தமிழகத்தில் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் மீதமுள்ள 85% எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான இடங்களுக்கு கலந்தாய்வை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ) நடத்துகிறது.
நடப்பாண்டு முதல் சுற்று கலந்தாய்வு https: //tnmedicalselection.net/ என்ற இணையதளத்தில் வரும் 13-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 2-ம் சுற்று கலந்தாய்வு வரும் 31-ம் தேதியும், 3-ம் சுற்று கலந்தாய்வு செப்டம்பர் 16-ம் தேதியும், இறுதி சுற்று கலந்தாய்வு அக்டோபர் 3-ம் தேதியும் தொடங்கி நடைபெறவுள்ளது.