சென்னை: மாநகராட்சி பள்ளிகளில் 10-ம் வகுப்பு தேர்வில் 89 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 22 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளன.
சென்னை மாநகராட்சி கல்வித் துறையின்கீழ் 206 தொடக்கப் பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 46 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 35 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 417 பள்ளிகள் செயல்படுகின்றன.
2025-26-ம் கல்வியாண்டில் நடைபெற்ற 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 46 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 35 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 81 பள்ளிகளில் பயிலும் 3,570 மாணவர்கள் மற்றும் 3,511 மாணவியர் என மொத்தம் 7,081 பேர் தேர்வு எழுதினர்.
இதில் 3,115 மாணவர்கள் (87.25%) மற்றும் 3,156 மாணவியர் (89.88%) என மொத்தம் 6,271 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு மொத்தம் 89 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 3 சதவீதம் கூடுதலாகும்.
பாடவாரியாக பார்க்கையில் தமிழ், கணிதம் பாடங்களில் தலா ஒருவர், அறிவியல் பாடத்தில் 6 பேர், சமூக அறிவியல் பாடத்தில் 5 பேர் என மொத்தம் 13 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில், பெரம்பூர், எம்.எச்.சாலை பெண்கள் மேல்நிலைப் பள்ளி 500-க்கு 495 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், எம்.எம்.டி.ஏ. உயர்நிலைப் பள்ளி 494 மதிப்பெண்களுடன் 2-ம் இடத்தையும், மடுவின்கரை- மேல்நிலைப் பள்ளி மற்றும் கீழ்ப்பாக்கம் உயர்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகள் தலா 489 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடத்தையும் பெற்றுள்ளன.
மாநகராட்சி பள்ளிகளில் 451 மதிப்பெண்களுக்கு மேல் 153 மாணவ, மாணவிகளும், 401 முதல் 450 வரை 578 மாணவ. மாணவிகளும், 351 முதல் 400 வரை 1115 மாணவ, மாணவிகளும் பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டு 20 பள்ளிகளில் 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2025-26 கல்வியாண்டில் நடைபெற்ற 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் தேர்ச்சி 94.31 சதவீதம். இதில் மாநகராட்சி உள்ளிட்ட அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி 86.25 சதவீதம்.
இதில் சென்னை மாநகராட்சி பள்ளிகள் தேர்ச்சி 89 சதவீதம். மாநில அளவில் உள்ள 139 மாநகராட்சி பள்ளிகளில் 35 மாநகராட்சிப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் சென்னை மாநகராட்சியின் 22 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.