சென்னை: கேட் நுழைவுத் தேர்வில் 12 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். ஐஐஎம் போன்ற தேசிய அளவிலான முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை மேலாண்மை படிப்புகளில் சேர, கேட் (Common Admission Test-CAT) நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும்.
இந்த ஆண்டுக்கான கேட் தேர்வு நாடு முழுவதும் 170 மையங்களில் கடந்த நவம்பர் 30-ம் தேதி நடைபெற்றது. 2.58 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். இத்தேர்வு முடிவுகளை கோழிக்கோடு ஐஐஎம் நேற்று முன்தினம் வெளியிட்டது.
அதில், 12 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். 26 பேர் 99.99 மதிப்பெண் பெற்றுள்ளனர். இந்த ஆண்டும் தேர்ச்சியில் மாணவர்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.
கேட் தேர்வு முடிவுகளை iimcat.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். கட்ஆஃப் மதிப்பெண் 90-க்கு மேல் நிர்ணயிக்கப்படும் என்று கூறப்படுகிறது. கேட் மதிப்பெண் மூலம், ஐஐஎம் மட்டுமின்றி, 93 இதர உயர்கல்வி நிறுவனங்களிலும் மேலாண்மை படிப்புகளில் சேரமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.