சென்னை: திருமணம் செயது கொள்வதாகக்கூறி 17 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததுடன், வீட்டில் இருந்த தங்க நகை மற்றும் பணத்தையும் மிரட்டி பெற்ற இளைஞருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சென்னை அல்லிக்குளம் மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞரான ஞானப்பிரகாஷ் அசோக்நகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாகக்கூறி ஞானப்பிரகாஷ் அந்த சிறுமியை பலமுறை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
திருமணம் முடிந்தபிறகு வெளிநாட்டுக்கு சென்றுவிடலாம் என அவர் கூறியதை நம்பி அந்த சிறுமி தனது வீட்டில் இருந்த தங்க நகை மற்றும் ரூ.10.75 லட்சத்தை பெற்றோருக்கு தெரியாமல் ஞானபிரகாஷூக்கு கொடுத்துள்ளார்.
திரைத்துறையில் பணியாற்றும் சிறுமியின் தந்தை பணியாளர்களுக்கு வழங்க வைத்திருந்த பணம் சிறுக, சிறுக காணாமல் போவதைக் கண்டுபிடித்து மகளிடம் விசாரித்துள்ளார்.
அப்போது அந்த சிறுமி தன்னை திருமணம் செய்து கொள்வதாகக்கூறிய இளைஞரிடம் தங்க நகை மற்றும் தொகையை கொடுத்தது மட்டுமில்லாமல், தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த விவரங்களையும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் அசோக்நகர் அனைத்து மகளிர் போலீஸார் கடந்த 2022-ம் ஆண்டு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஞானப்பிரகாஷை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை அல்லிக்குளம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் வெற்றி ஆஜராகி வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜி. பிரபாகரன், குற்றம் சாட்டப்பட்ட ஞானப்பிரகாஷூக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.7.50 லட்சத்தை இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டு்ள்ளார்.