மணிகண்டன்
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே இறுதி ஊர்வலத்தில் நடனம் ஆடுவதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அருகே உள்ள கடம்பத்தூர் அடுத்த அகரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் நேற்று காலை உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது இறுதி ஊர்வலம் நேற்று மாலை நடைபெற்றது. அந்த ஊர்வலத்தில் நடனம் ஆடுவது தொடர்பாக இரு தரப்பு இளைஞர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியதையடுத்து, பொதுமக்கள் அவர்களை தடுத்து நிறுத்தி, சமாதானப்படுத்தினர்.
தொடர்ந்து உயிரிழந்த பெண்ணின் இறுதி ஊர்வலம் மயானப் பகுதியை அடைந்தபோது, அங்கு மது அருந்தி கொண்டிருந்த இளைஞர்களுக்கு இடையே, இறுதி ஊர்வலத்தில் நடனம் ஆடுவது தொடர்பாக மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த வாக்குவாதம் முற்றியதன் விளைவாக ஒரு தரப்பினர், அகரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (24) என்ற இளைஞரை கழுத்துப் பகுதியில் வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த மணிகண்டனை மயானப் பகுதியில் இருந்த பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்ற மணிகண்டன் நேற்று இரவு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி இளைஞர் மணிகண்டன் உயிரிழந்தார்.
மணிகண்டனின் உறவினர்கள், கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி அகரம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மணிகண்டன் கொலை தொடர்பாக கடம்பத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.