சென்னை: ஆந்திராவில் இருந்து குட்கா பாக்கெட்களை மொத்தமாக வாங்கி வந்து, சென்னையில் விற்பனை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். சென்னையில் போதைப் பொருட்கள், குட்கா வகை புகையிலைப் பொருட்களின் விற்பனை, பதுக்கல், கடத்தலை தடுக்க போலீஸாருக்கு காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, கண்காணிப்பு முடுக்கி விடப்பட்டுள்ளது. போலீஸ் கண்காணிப்பு இந்நிலையில், ராயபுரம் அப்பையர் தெருவில் போலீஸார் நேற்று முன்தினம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சந்தேகத்தின் பேரில் ஒருவரிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால், அவரது பையை சோதனை செய்தனர். அதில் 15 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
அவற்றை பறிமுதல் செய்த போலீஸார், குட்கா புகையிலை பாக்கெட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த ராயபுரம் அப்பையர் சந்து பகுதியை சேர்ந்த விக்னேஷ்வரன் (26) என்பவரை கைது செய்தனர்.
அவர் ஆந்திராவில் இருந்து குட்கா பாக்கெட்களை மொத்தமாக வாங்கி வந்து, சென்னையில் சட்ட விரோதமாக விற்பனை செய்ததும், இவர் மீது ஏற்கெனவே 2 குட்கா வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. எனவே விக்னேஷ்வரனை போலீஸார் சிறையில் அடைத்தனர்.