க்ரைம்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: ஊட்டியில் திருத்தணி இளைஞர் கைது

செய்திப்பிரிவு

ஊட்டி: திருத்தணியைச் சேர்ந்தவர் நாகராஜ் (20). இவருக்கு சமூக வலைதளம் மூலம் ஊட்டியைச் சேர்ந்த 15 வயது சிறுமி அறிமுகம் ஆகியுள்ளார். நீண்ட நாட்களாக சமூக வலைதளம் மூலம் இவர்கள் பேசி வந்துள்ளனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி உள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் சிறுமி திடீரென்று வீட்டில் இருந்து மாயமானார். இதுகுறித்து ஊட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். சிறுமியின் சமூக வலைதள கணக்கை ஆய்வு செய்த போலீஸார் நாகராஜுடன் பழகியதை தெரிந்து கொண்டனர்.

இதையடுத்து, செல்போன் சிக்னல் மூலம் நாக ராஜை கண்காணித்தபோது ஊட்டியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அவர் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக அங்கு சென்ற போலீஸார் சிறுமியை மீட்டு ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, விடுதியில் வைத்து சிறுமியை நாகராஜ் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து நாகராஜை கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT