மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் சுராஜ் (22). இவர், கரும்புக் கடை பகுதியில் தங்கியிருந்து அப்பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை செய்து வருகிறார். இவர், கடந்த 28-ம் தேதி வேலை முடிந்து உக்கடம் புல்லுக்காடு அருகே நடந்து சென்றார்.
அப்போது அந்த வழியாக பின்னோக்கி வந்த ஆட்டோ அவர் மீது மோதியது. அதில் அவர் தவறி கீழே விழுந்தார். உடனே சுராஜ், அந்த ஆட்டோவில் இருந்த 2 பேரிடம் என் மீது ஏன் மோதினீர்கள் என்று கேட்டதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் சுராஜை சரமாரியாக தாக்கினர். அதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் கடை வீதி போலீஸார் அடிதடி வழக்காக பதிவு செய்து சுராஜை தாக்கியதாக, தெற்கு உக்கடத்தை சேர்ந்த முகமது பஷீத்கான் (30), பிரகாஷ் (38) ஆகியோரை கைது செய்தனர்.
இந்நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டு இருந்த சுராஜ் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் முகமது பஷீத்கான், பிரகாஷ் ஆகியோர் மீதான அடிதடி வழக்கை. கொலை வழக்காக கடை வீதி போலீஸார் மாற்றி உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.