திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே முருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் என்கிற பாலமுருகன் (48). இவர், அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து, ஆடு மற்றும் கோழி பண்ணை நடத்தி வருகிறார்.
இவரது பண்ணையில் பணி செய்ய திருத்தணி, இந்திரா நகரை சேர்ந்த வினோத், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தன் உறவினரான வெண்ணிலா மற்றும் அவரது 3 மகன்களை அனுப்பி வைத்துள்ளார்.
அங்கு வெண்ணிலா, தன் 3 மகன்களுடன் தங்கி, ஆடு மேய்க்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர்களுடன் வினோத்தும் பணிபுரிந்துள்ளார். இதற்கிடையே கடந்த 4 மாதங்களுக்கு முன் வெண்ணிலாவின் மூத்த மகன் சுரேஷ் (15), சரிவர ஆடு மேய்க்கவில்லை எனக் கூறி, அவரை ஆட்டு பண்ணை உரிமையாளர் பாலமுருகன் கடுமையாக தாக்கியுள்ளார்.
படுகாயமடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து பாலமுருகன், வெண்ணிலாவின் உறவினர் வினோத்தின் உதவியுடன், சுரேஷின் உடலை பண்ணை வளாகத்தில் புதைத்துவிட்டு, யாருக்கும் சந்தேகம் வராத வகையில் அதன் மேல் சிமென்ட் தரை போல் பூசி மறைத்துள்ளார்.
மேலும், பாலமுருகனும், வினோத்தும் சுரேஷ் கொலை குறித்து வெளியில் தெரியாமல் இருக்க, வெண்ணிலா, 2 சிறுவர்களை பண்ணையில் அடைத்து வைத்துள்ளனர்.
இந்நிலையில், ஆட்டுப் பண்ணையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வெண்ணிலா நேற்று முன் தினம் அங்கிருந்து தப்பி, திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் பாலமுருகன், வினோத் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். சுரேஷின் உடல் பொக்லைன் மூலம் தோண்டியெடுக்கப்பட்டு, வருவாய்த் துறையினர் போலீஸார் முன்னிலையில், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குழுவினரால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.