சென்னை: சென்னையை அடுத்த எர்ணாவூர் பகுதியை சேர்ந்த ரவுடி ஒருவர் இரு தினங்களுக்கு முன்னர் திடீரென உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த அவரது நண்பர்களான வியாசர்பாடியை சேர்ந்த சதீஷ்குமார் (25) மற்றும் தவெக உறுப்பினரான தீனா என்ற தினேஷ்குமார்(30) ஆகியோர், ரவுடியின் சடலத்தை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் அதிகாலை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சென்றனர்.
அவர்கள் இருவரும் மருத்துவமனை சவக்கிடங்கு பகுதிக்கு வியாசர்பாடியை சேர்ந்த சங்கருடன் சென்றனர். அப்போது, பிரேதப் பரிசோதனை கூடத்தில் பணியில் இருந்த சீனிவாசனிடம் ரூ.200 கொடுத்து பிணவறையின் சாவியை பெற்று பிணவறை உள்ளே சென்ற 2 பேரும், அங்கு வைக்கப்பட்டிருந்த சடலங்களை செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் மருத்துவமனை பணியாளர்களுக்கு தெரிய வந்ததையடுத்து, மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் ஸ்டான்லி அரசு மருத்துவமனைவளாக போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது பிணவறையில் வீடியோ எடுத்ததாக கூறப்படும் சதீஷ்குமார், தினேஷ்குமார் சங்கர் ஆகிய 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீஸார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது, சமூக வலைதளத்தில் ரீல்ஸ் போடுவதற்காக பிணவறைக்குள் சென்று அங்கிருந்த சடலங்களை வீடியோ எடுத்ததாக அவர்கள் போலீஸாரிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து, சவக்கிடங்குக்குள் அத்துமீறி நுழைந்தது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 3 பேரையும் இரவோடு இரவாக போலீஸார் ஜார்ஜ் டவுன் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர். அவர்கள் 3 பேரையும் நீதிபதி ஜாமீனில் விடுவித்தார்.
பிணவறையின் சாவியை வெளியாட்களுக்கு வழங்கியதாக கூறப்படும் சவக்கிடங்கு பணியாளர் சீனிவாசன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கைதான சதீஷ்குமார் (25) மற்றும் தவெக உறுப்பினரான தினேஷ்குமார் ஆகியோர் மீது ஏற்கெனவே குற்ற வழக்குகள் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.