சென்னை: தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸ் என்று கூறி சைபர் மோசடியில் ஈடுபட்ட கும்பலிடம் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் தனது பணம் ரூ.1 கோடி மட்டுமின்றி, தனது மனைவி வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1 கோடியையும் அனுப்பி ஏமாந்துள்ளார்.
இதுகுறித்து சென்னை சைபர் க்ரைம் போலீஸார் விசாரிக்கின்றனர். சென்னையில் வசிக்கும் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு சமீபத்தில் போன் அழைப்பு வந்தது.
எதிர்முனையில் பேசியவர், தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரி என தன்னை அறிமுகம் செய்து கொண்டார். தொடர்ந்து, “உங்கள் வங்கி கணக்குகளை தீவிரவாதிகள் சட்ட விரோத பணப் பரிமாற்றத்துக்கு பயன்படுத்தி உள்ளனர்.
உங்களிடம் அதுகுறித்து விசாரிக்க வேண்டும். நீங்கள் ஒத்துழைக்கவில்லை என்றால் கைது செய்து உங்களது போட்டோவை வெளியிடுவோம்.
தற்போது உங்களை கைது செய்து வீட்டுச் சிறையில் வைத்துள்ளோம். நீங்கள் நிரபராதி என நிரூபிக்க வேண்டும் என்றால் நாங்கள் கூறும், வங்கிக் கணக்குக்கு உங்கள் கணக்கில் உள்ள பணத்தை அனுப்புங்கள்.
நாங்கள் சரிபார்த்துவிட்டு, முறைகேடு நடக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு, உங்கள் பணத்தை திருப்பி அனுப்பி விடுகிறோம்” என்று கூறியுள்ளார்.
வாக்கி டாக்கி சத்தம்
பின்னணியில் வாக்கி டாக்கி சத்தம் கேட்டதால் இதையெல்லாம் உண்மை என்று நம்பிய ஓய்வு பெற்ற ஆசிரியர், தனது வங்கிக் கணக்கில் உள்ள ரூ.1 கோடிக்கும் அதிகமான பணத்தை அந்த வங்கிக் கணக்குக்கு அனுப்பியுள்ளார்.
இதையடுத்து, சகஜமாக பேசிய அந்த நபர், ஆசிரியரது மனைவியின் வங்கிக் கணக்கிலும் சந்தேகம் உள்ளதாகக் கூறி, அந்த கணக்கில் இருந்தும் ரூ.1 கோடிக்கும் அதிகமான பணத்தை தான் கூறும் வங்கிக் கணக்குக்கு அனுப்பச் சொல்லியுள்ளார்.
போனில் பேசிய நபர் மிரட்டியதால் இதுபற்றி யாரிடமும் தெரிவிக்காத ஆசிரியர்கள், கடைசியில் மொத்த பணத்தையும் இழந்த பிறகு, ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார்.
பின்னர், சென்னை காவல் ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார். இந்த மோசடியில் ஈடுபட்ட சைபர் மோசடி கும்பலை சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம் போலீஸார் தேடி வருகின்றனர்.