ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பத்திரம் பதிவு செய்ய ரூ.3 லட்சம் வாங்கிய சார்பதிவாளர், இடைத்தரகர் ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் நேற்று கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட, சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் மருத்துவர் ஹாலிக் அலாவுதீன். இவர் ராமநாதபுரம் அருகே குயவன்குடி கிராமத்தில் 1.98 ஏக்கர் நிலத்தை தனது தாயார் பெயரில் பத்திரம் பதிவு செய்ய, வெளிப்பட்டணம் சார் பதிவாளர் ராமநாதனை அணுகி உள்ளார்.
அப்போது பத்திர பதிவு செய்ய சார் பதிவாளர் ரூ.50 லட்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. அதன்பின் ஹாலிக் அலாவுதீன், ரூ.3 லட்சத்தை சார் பதிவாளரின் வங்கிக் கணக்கிலும், ரூ.17 லட்சத்தை இடைத்தரகர் அயூப்கான் என்பவரிடம் வழங்கி உள்ளார்.
மீண்டும் நிலப்பதிவு செய்ய முயற்சித்தபோது, மீதியுள்ள பணத்தை கொடுத்தால் தான் பத்திர பதிவு செய்யப்படும் என சார் பதிவாளர் கூறியுள்ளார்.
இந்நிலையில் மருத்துவர் ஹாலிக் அலாவுதீன், ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸில் புகார் அளித்தார். அதனையடுத்து போலீஸார் அறிவுரையின்படி, ரசாயனம் தடவிய ரூ.3 லட்சத்தை நேற்று சார் பதிவாளர் ராமநாதனிடம் இடைத்தரகர் அயூப்கான் கொடுக்கும்போது மறைந்திருந்த லஞ்சஒழிப்பு போலீஸார் இருவரையும் கையும் களவுமாக கைது செய்தனர்.
சார் பதிவாளர் ராமநாதன் பரமக்குடியைச் சேர்ந்தவர், இடைத்தரகர் அயூப்கான் புதுமடத்தைச் சேர்ந்தவர். ஒரு நிலப்பதிவுக்கே ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்கப்பட்டது குறித்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது.