கரூர்: கரூர் இளநீர் வியாபாரி கொலை வழக்கில் 7 பேருக்கு 3 ஆயுள், ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கரூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கரூர் சின்ன ஆண்டாங்கோவில் பகுதியைச் சேர்ந்த இளநீர் வியாபாரியான கிருஷ்ணமூர்த்தி (25), கடந்த 2020 செப்.18-ம் தேதி ஒரு கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இதுகுறித்து கரூர் நகர போலீஸார் வழக்குப்பதிந்து, கோகுல கண்ணன், துரைபாண்டி உள்ளிட்ட 12 பேரை கைது செய்தனர். இதில், தலைமறைவாக இருந்த பிரேம்குமார் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.
கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில், நீதிபதி கே.ஹெச்.இளவழகன் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார்.
அதில், கோகுல கிருஷ்ணனுக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.
மேலும் துரைபாண்டி, மணிகண்டன், கேசவன், அரவிந்த குமார், தமிழரசன், அஜித், செந்தில் ஆகிய 7 பேருக்கு 3 பிரிவுகளின்கீழ் தலா 3 ஆயுள் சிறைத்தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.
மேலும், ஒவ்வொரு குற்றத்துக்கும் தலா ரூ.37,500 என தலா ரூ.1,12,500 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
தலைமறைவாகி சில மாதங்களுக்கு பிறகு பிரேம்குமார் கைதானதால், அவர் மீதான வழக்கு தனியாக நடைபெற்றது. அவருக்கு நாளை தண்டனை அறிவிக்கப்பட உள்ளது.