ராஜா
திண்டுக்கல்: வத்தலக்குண்டு அருகே சப்-இன்ஸ்பெக்டரை பட்டாக்கத்தியால் வெட்டி விட்டு தப்ப முயன்ற ரவுடியை போலீஸார் காலில் சுட்டுப் பிடித்தனர்.
இது குறித்து காவல் துறையினர் பகிர்ந்த தகவல்கள்: திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே சிக்கனம்பட்டியை சேர்ந்தவர் ராஜா (55). இவரது பெயர் போலீஸாரின் சரித்திர குற்றப்பதிவேட்டில் உள்ளது. இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. இவர், ஒரு குடும்பத்துக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளார். இது குறித்து அந்த குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்தனர்.
இதையடுத்து போலீஸார், ரவுடி ராஜாவின் நடமாட்டத்தை கண்காணிக்க துவங்கினர். நேற்று வத்தலக்குண்டு அருகே என்.கோவில்பட்டி என்ற இடத்தில் ராஜா இருப்பதாக தகவல் கிடைத்தது.
இந்நிலையில், தனிப்படை எஸ்.ஐ. அருண்பிரசாத் மற்றும் போலீஸார் ராஜாவை பிடிக்க சென்றனர். போலீஸாரை கண்டதும் எஸ்.ஐ. அருண்பிரசாத்தின் கையில் பட்டாக்கத்தியால் வெட்டி விட்டு தப்பிக்க முயன்றார். சுதாரித்க் கொண்ட எஸ்.ஐ அருண்பிரசாத், ரவுடி ராஜாவின் காலில் துப்பாக்கியால் சுட்டார்.
படுகாயமடைந்த ராஜாவை போலீஸார் நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சையளித்தனர். ரவுடி சுடப்பட்ட இடத்தில் டிஎஸ்பி இளஞ்செழியன், மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமார் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.