பிரதிநிதித்துவப் படம்
திருச்சி: திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அரசு காலனியைச் சேர்ந்தவர் பிரபு(30). கோழி இறைச்சிக் கடை வைத்துள்ளார். இதே பகுதியை சேர்ந்த அப்புஜி (எ) ரி.அபுதாகீர் (38). எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய சரித்திர பதிவேடு ரவுடி பட்டியலில் இருந்தவர்.
இவர், 2 நாட்களுக்கு முன் பிரபுவை பணம் கேட்டு மிரட்டியுள்ளார். ஆனால், பணம் கொடுக்க பிரபு மறுத்ததால், அபுதாகீர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வெட்டியதில் பிரபுவின் காதில் காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த எடமலைப்பட்டிபுதூர் போலீஸார் அபுதாகீரை தேடி வந்த நிலையில், அன்று இரவு ரோந்து பணியில் இருந்த போலீஸார் அபுதாகீரை பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால், அவர்களிடம் இருந்து அபுதாகீர் தப்பியோடியதாக தெரிகிறது. அதன்பிறகு, அபுதாகீர் குறித்த எவ்வித விவரமும் போலீஸாருக்கு தெரியவில்லை.
இந்நிலையில், அரசு காலனி பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் படுகாயங்களுடன் அபுதாகீர் நேற்று அதிகாலை இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த திருச்சி ரயில்வே போலீஸார் அபுதாகீர்
உடலை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், போலீஸார் தீவிரமாக தேடியதால்தான் அபுதாகீர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் விசாரித்தபோது, ‘‘அபுதாகீர் மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. மது மற்றும் கஞ்சா குடிபோதையில் இருந்த அபுதாகீர் தனது வீட்டருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்றபோது, நேற்று முன்தினம் இரவு திருச்சி- மதுரை செல்லும் ரயிலில் நிலைதடுமாறி விழுந்து இறந்துள்ளார். போலீஸ் தேடியதால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது தவறான தகவல்’’ என்றனர்.