பொதும்பு வானவில் நகரில் 100 பவுன், அமெரிக்க டாலர்கள் திருட்டு நடந்த ஐடி ஊழியர் வீடு.
மதுரை புறநகர் பகுதியில் தனியாக இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு நகைகளை திருடிச் செல்லும் கும்பல்களை பிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மதுரை நகர் எல்லையின் விரிவாக்கப் பகுதிகளில் ஏராளமான புதிய குடியிருப்புகள் உருவாகி உள்ளன. நகருக்கு தண்ணீர் பிரச்சினை, நெரிசலை தவிர்க்க பலர் புறநகர் பகுதி களில் வீடுகளை கட்டி குடியேறுகின்றனர். சமீப காலமமாக புறநகர் பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளை பகலில் நோட்டமிட்டு இரவில் கொள்ளை கும்பல் வீடு புகுந்து திருடிச் செல்வது அதிகரித்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அலங்காநல்லூர் காவல் சரகம் பாசிங்காபுரம் பகுதியில் பெண் காவல் ஆய்வாளர் ஒருவரின் பூட்டியிருந்த வீட்டில் 200 பவுன் நகைகள் திருடப்பட்டன. இவ்வழக்கில் கொள்ளையர்கள் இதுவரை பிடிபடவில்லை. வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா ஹார்டு டிஸ்க்கையும் கொள்ளை கும்பல் திருடிச் சென்றதால் துப்பு துலக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.
இந்நிலையில், பொதும்பு அருகே வானவில் நகரில் அமெரிக்காவில் பணிபுரியும் ஐடி ஊழியர் சதீஷ் (50) புதிதாக வீடு கட்டி குடியேறினார். வீட்டில் அவரது மனைவி குடும்பத்தார் இருந்தனர். அவர்கள் கடந்த 25-ம் தேதி கொடைக்கானல் சென்றுவிட்டு நேற்று முன்தினம் திரும்பியபோது, கதவை உடைத்து 100 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் மதிப்பு 500 அமெரிக்க டாலர்கள் திருடுபோனது தெரிந்தது. காரில் வந்த கொள்ளைக் கும்பல் வீட்டில் பொருத்தி யிருந்த சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தி விட்டு அதன் ஹார்டு டிஸ்க்கையும் திருடிச் சென்றது.
இதனால் வீட்டுக்கு அருகே பிரதான சாலையில் உள்ள கேமராக்களை வைத்து அலங்காநல்லூர் காவல் ஆய்வாளர் செல்வக்குமார் தலை மையிலான தனிப்படை போலீஸார் திருடர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். புறநகரில் விரிவாக்கப் பகுதி களில் நடக்கும் இதுபோன்ற திருட்டுச் சம்பவங்களால் குடி யிருப்புவாசிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
இது குறித்து போலீஸார் கூறுகையில், ’பெரும்பாலும் புறநகர் பகுதியில் கிராமத்துக்குள், வீடுகள் நெருக்கமாக இருக்கும் குடியிருப்புகளை கொள்ளையர் தவிர்க்கின்றனர். விரிவாக்கப் பகுதி, வயல் வெளிகளில் தனியாக இருக்கும் வீடுகள், பூட்டிக் கிடக்கும் வீடு களை பகலில் நோட்டமிட்டு இரவில் திருடுகின்றனர்.
பூட்டிய வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபடும் திருடர்களின் பட்டியலை சேகரித்து விசாரிக்கிறோம். சதீஷ் வீட்டில் திருடிய கும்பலுக்கும், கடந்த 2 ஆண்டு களுக்கு முன்பு பாசிங்காபுரம் பகுதியில் காவல் ஆய்வாளர் வீட்டில் திருடிய கும்பலுக்கும் தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் விசாரிக்கிறோம்.
இருப்பினும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக வீடு கட்டி குடியிருப்போர், வீடுகளில் அதிக நகை, பணம் வைப்பதை தவிர்க்க வேண்டும். வெளியூர் செல்வோர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தால் வீடுகளை கண்காணிப்போம்' என்றனர்.